
சென்னை, பிப்.8 (டிஎன்எஸ்) சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணாத்துரை நூற்றாண்டு விழா நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. நூலகத்துக்கு பெததுமக்களிடம் கல்லூரி மாணவ, மாணவிகள் புத்தகம் சேகரித்து வருகின்றனர். நூலகத்துககாக முதல்வர் கருணாநிதி 1000 புத்தகங்களை மாணவ, மாணவிகளிடம் வழங்கினார்.
உலகத்தரத்தில் சென்னை கோட்டூர் புரத்தில் அண்ணா நூலகம் கட்டப்படுகிறது. இதன் திறப்பு விழா விரைவில் நடைபெற உள்ளது. இந்த நூலகத்துக்கு புத்தகங்கள் திரட்டப்படுகின்றன. சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம், 'படித்ததை பிறருக்கு படிக்க கொடுப்போம்' என்ற திட்டத்தை அறிவித்தார். அதன்படி கல்லூரி மாணவ- மாணவிகள் வீடு வீடாக சென்று புத்தகங்களை சேகரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் திருவாசகம் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டுக்கு சென்றனர். அங்கு முதலமைச்சரை சந்தித்து அண்ணா நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்று முதலமைச்சர் கருணாநிதி தனது வீட்டில் இருந்த ஆயிரத்துக்கும் அதிகமான அரிய பல புத்தகங்களை தனது சார்பில் வழங்கினார்.
அவற்றை சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் பெற்றுக் கொண்டார். நாட்டு தொண்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிவாசகம் மற்றும் மாணவ-மாணவிகள் உடன் இருந்தனர்.
துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது வீட்டில் இருந்து ஏராளமான புத்தகங்களை, அண்ணா நூலகத்துக்காக மாணவ-மாணவிகளிடம் வழங்கியுள்ளார். (டிஎன்எஸ்)