புதுதில்லி, மார்ச்.10 (டிஎன்எஸ்) மசோதாவை ஆதரித்த மம்தா அதில் முஸ்லீம்களுக்கு உள் ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று கோரினார். ஆனால், அதை அரசு ஏற்கவில்லை. இதையடுத்தே, தங்களிடம் உரிய முறையில் விவாதிக்காமல் இந்த மசோதாவை காங்கிரஸ் நிறைவேற்றுவதாகக் கூறி நேற்று (மார்ச்.8) அதன் மீது நடந்த ஓட்டெடுப்பை புறக்கணித்துள்ளார் மம்தா.
இஸ்லாமிய பெண்களுக்கு உரிய உள் ஒதுக்கீடு வழங்கப்படாததால் தான் மசோதா மீதான வாக்கெடுப்பை மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி புறக்கணித்துள்ளது.
அடுத்தாண்டு நடக்கும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளார் மம்தா. இம் மாநிலத்தில் இஸ்லாமியர் ஓட்டுக்கள் அதிகளவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்யசபாவில் 2 எம்பிக்கள் கொண்டுள்ள மம்தாவின் கட்சிக்கு மக்களவையில் 19 எம்பிக்கள் உள்ளனர். இப்போது காங்கிரஸ் கூட்டணியில் உள்ள 2வது பெரிய கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தான். 18 எம்பிக்கள் கொண்ட திமுக மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது.
மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசுகையில், மத்திய அரசில் இடம் பெற்றுள்ள முக்கிய கூட்டணி கட்சி எங்களது திரிணாமுல் காங்கிரஸ். எனவே மத்திய அரசு எங்களுடன் மசோதா குறித்து ஆலோசனை நடத்தி எங்களுடைய நம்பிக்கையை பெற்றிருக்க வேண்டும். ஆனால், எங்கள் நம்பிக்கையை பெற எந்த முயற்சியையும் காங்கிரஸ் பெறவில்லை.
ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நம்பிக்கையை பெற்றிருக்கிறார்கள். இந்த பிரச்சனையில் இடதுசாரி கட்சிகளின் நிர்ப்பந்தத்துக்கு மத்திய அரசு பணிந்து விட்டது. மசோதாவை நிறைவேற்றும் முன் அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று பிரதமர் கூறியிருந்தார்.
ஆனால் இடதுசாரிகளின் ஆதரவு இருந்ததால் அதை ராஜ்யசபாவில் அவசர அவசரமாக விவாதம் நடத்தி நிறைவேற்றி விட்டார்கள் என்றார் மம்தா. (டிஎன்எஸ்)